திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.123 திருக்கோணமாமலை பண் - புறநீர்மை |
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்
நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே.
|
1 |
கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடைந்தை
பிறைநுத லவளொடும் உடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்
கோணமா மலையமர்ந் தாரே.
|
2 |
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக
மாகமுன் கலந்தவர் மதின்மேற்
தனித்தபே ருரவ விழித்தழல் நாகந்
தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
|
3 |
பழித்திளங் கங்கை சடைமுடி வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடற் றரளஞ்
செம்பொனும் இப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கடையிடைச் சேர்க்குங்
கோணமா மலையமர்ந் தாரே.
|
4 |
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலங்
கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
|
5 |
பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி
தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ்
செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலால்
ஏத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும்
இறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வுங்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர்
கோணமா மலையமர்ந் தாரே.
|
8 |
அருவரா தொருகை வெண்டலை யேந்தி
யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையும் நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம்ஒள் ளெளியாய்
உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்குங்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே.
|
9 |
நின்றுணுஞ் சமணும் இருந்துணுந் தேரரும்
நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசினர் ஒருபால்
மெல்லிய லொடும்உட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங்
கோணமா மலையமர்ந் தாரே.
|
10 |
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலை யீரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |